25 Jan 2011 02:29:38 PM IST
"இலவச காஸ் அடுப்புக்கு சிலிண்டர் தருவதில்லை'
ஆம்பூர், ஜன. 24: தமிழக அரசு வழங்கும் இலவச காஸ் அடுப்புக்கு சிலிண்டர் தர எரிவாயு முகவர் மறுப்பதாகக் கூறி, குறைகேட்பு கூட்டத்தில் நுகர்வோர் புகார் கூறினர். அப்போது அவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டும், தரையில் அமர்ந்து தர்னாவும் நடத்தினர்.
ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு கூட்டத்தில், நுகர்வோர் பேசியது:
தமிழக அரசின் இலவச காஸ் அடுப்பு பெற்ற நுகர்வோர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிலிண்டர்களை முகவர் சரிவர வழங்குவதில்லை. எரிவாயு நிரம்பிய சிலிண்டர்களை வழங்காமலேயே காலியாக உள்ள சிலிண்டர்களை வாங்கி சென்று விடுகின்றனர்.
"எரிவாயு நிரம்பிய சிலிண்டர்களை கேட்டால் நீங்கள் காலி சிலிண்டரை கொடுக்கவில்லை அதனால் எரிவாயு சிலிண்டர் கொடுக்க முடியாது' என முகவர் தெரிவிக்கிறார். சிலிண்டருக்கு பணம் செலுத்தினால் ரசீது கொடுப்பதில்லை. பதிவு செய்ய எஸ்எம்எஸ் அனுப்புங்கள் என எழுத்தறிவில்லாத நுகர்வோரிடம் முகவர் வலியுறுத்துகிறார்.
எரிவாயு சிலிண்டங்களை வாங்க நுகர்வோர் ஆட்டோவில் சென்று எடுத்து வர வேண்டியுள்ளது. இதுதொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி நுகர்வோர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டும், தரையில் அமர்ந்து தர்னாவிலும் ஈடுபட்டனர்.
புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, நுகர்வோர் கலைந்து சென்றனர்.
கூட்டத்துக்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் எஸ். சாந்தா தலைமை வகித்தார். எம்எல்ஏ ஹெச். அப்துல் பாசித், வட்ட வழங்கல் அலுவலர்கள் மதியழகன், குணசீலன், விஜயன், சரவணன், துரை, நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் குணசீலன், அக்பர், ரத்தினசாமி, விஜயராஜ், பஷீருத்தின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.